Saturday, October 5, 2013

மதுரையில் ஓநாய்

நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான  சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்:

  • படம் பார்த்துவிட்டு வெளியே வந்துக்கொண்டு இருந்த ரசிகர்களில் சிலர் இயக்குனர் மிஸ்கினை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனடியாக அங்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது விட்டது.
  • 40 வயது ரசிகர் ஒருவர் நேராக வந்து  இயக்குனரை கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். ஆரவாரமாக இருந்த அந்த இடம் திடீரென்று அமைதிப்பூங்காவாக மாறிவிட்டது. இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அழுதுக்கொண்டு இருந்த அந்த நபர் பின்னர் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
  • நடுத்தர வயது பெண்மணி ஒருவர் முதலில் வாழ்த்து சொல்லி பேசிக்கொண்டு இருந்தார். பேச்சின் நடுவிலேயே உடைந்து அழ ஆரம்பித்து விட்டார். இயக்குனர் அவரை தேற்றி அனுப்பி வைத்தார்.
  • ஐம்பது வயதை நெருங்கும் ஒருவர் எதுவுமே பேசாமல் வந்து சாஷ்டாங்கமாக இயக்குனரின் காலில் விழுந்து விட்டார். இயக்குனர் தடுக்க முயற்ச்சித்தார் . காலில் விழுந்த அவர், பின்னர் எதுவுமே பேசாமல் ஒரு புன்னகையுடன் சென்று விட்டார்.

 

Mysskin in Madurai 4th Oct 2013

இவாறாக கோவை, திருச்சி, கரூர் மற்றும் மதுரை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இயக்குனர் இன்று சென்னை த்ரிரும்பி விட்டார். இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தில் அவருக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு தான் அவரை தற்போது இயங்க வைத்துக்கொண்டு இருகீரது என்றால் அது மிகையல்ல.

Mysskin in Madurai On 4th Oct 2013

நாளைக்கு மாலை (ஞாயிற்றுக்கிழமை) சாயங்காலம் 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் "புக் பாய்ன்ட்" என்னும் புத்தக சாலையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்கிற படத்தை பற்றிய ஒரு விவாதகூட்டம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை தங்கங்கள் பவா செல்லதுரையும், கல்வியாளர் கருணாவும் ஒழுங்கு செய்துள்ள இந்த கூடத்திற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்

Book Point Meeting

Friday, October 4, 2013

திருச்சி பஸ் ஸ்டான்டில் ஓநாய்

தன்னுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று (3அக்டோபர் ம் தேதி) திருச்சி வந்தடைந்த இயக்குனர் மிஸ்கின் இரவு / அதிகாலை 2 மணிக்கு திருச்சி பஸ் ஸ்டான்டில் தன்னுடைய நன்றி தெரிவிக்கும் போஸ்டரை ஓட்டும்போது எடுத்த படம் இது.

SAD_0318 - trichy busstandசுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று (அக்டோபர் 4ம் தேதி) இயக்குனர் மிஸ்கின் மதுரைக்கு செல்கிறார்.

SAD_0328 - trichy busstand

ஜான்டே இந்திப்பட விமர்சனம் JohnDay 13-09-2013 Hindi Film

John Day மங்களூர் எர்போர்ட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிமோகா என்கிற இந்த சிறிய ஊர். இந்த ஊரின் மைய்யமாக ஜவகர்லால் நேரு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் அதிகம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கிரிக்கெட் ஆர்வம் அப்படி இருந்தாலும்கூட ஷிமோகா என்கிற ஒரு சிறிய ஊருக்கு ஒரு சாதாரண A அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியை காண பத்தாயிரம் பேர் வருவது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கே இப்போதெல்லாம் இந்த அளவுக்கு கூட்டம் வருவதில்லை. ஆனால் ஷிமோகாவில் நடக்கும் ஒரு சாதாரண போட்டிக்கு இந்த கூட்டம் வந்தது எதனால்? என்று பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் சூப்பர் ஸ்டார்களாக இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் அணியில் திரும்ப வருவதற்கான முயற்சியில் இந்த போட்டியில் விளையாடுவதே ஆகும்.

இப்படி நமக்கு தெரிந்த சூப்பர் ஸ்டார்கள் இருந்ததால் 10,000 பேர் வந்து அந்த மைதானத்தை ஆக்ரமித்துக் கொண்டு காத்திருந்தனர். ஆனால் இரண்டாம் நாள் (இன்று அக்டோபர் 3) முடிவில் அவர்கள் அனைவருக்குமே சற்று வருத்தமே. இரண்டு ஸ்டார்களும் சோபிக்கவில்லை. கிட்ட தட்ட அந்த போட்டியை நேரில் பார்த்துவிட்டு வந்தவர்களின் மனநிலையில் தான் நானும் John Day என்கிற இந்த இந்திப் படத்தை பார்த்து விட்டு வந்தேன்.

படத்தின் பின்னணி: தமிழில் ஒலக நாயகன் நடித்து வந்த "உன்னைப்போல ஒருவன்" படம் நினைவிருக்கிறதா? அந்த படத்தின் மூலமான A Wednesday படக்குழுவினரிடம்  அடுத்த படம் என்கிற போஸ்டர் வாக்கியமே என்னை இந்த படத்தின் பால் ஈர்த்தது. அதுவும் சமீப படங்களில் தன்னுடைய Moody, நெகடிவ் நடிப்பால் என்னை கவர்ந்த ரந்தீப் ஹூடா, இந்த படத்தில் என்னுடைய All Time Favourite நசீருத்தின் ஷாவுடன் இனைந்து நடிக்கிறார் என்கிற அழைப்பிதழ் வேறு, கேட்கவா வேண்டும்? உடனே படம் பார்க்கும் ஆவல் மேலிட்டது.

ஆனால் இந்த மாதிரி "From The Producer Of" என்கிற விளம்பர தொனியில் இதுவரை வந்த படங்கள் எதுவுமே சோபிக்கவில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை. At Least நான் பார்த்த படங்களில் மட்டுமாவது இந்த விஷயம் தொடர்கிறது. ஆகையால் ஒரு நடிப்பின் இலக்கணமும், மற்றுமொரு ப்ராமிசிங் நடிகர் கொண்ட இந்த கூட்டணி மீது நம்பிக்கை இருந்தாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.

JD

படத்தின் கதை: இதுவரையில் நாம் படித்த இரண்டாயிரத்து சொச்சம் ராஜேஷ் குமார் நாவல்களின் திரை வடிவமே இந்த JohnDay திரைப்படம். திரைப்படமும் கிட்டத்தட்ட அதே பாணியிலும் அமைந்து இருப்பது ஒரு தனி விஷயம்.

  • ஒரு மர்மமான, புரியாத, சம்பந்தமில்லாத ஆரம்பம்.
  • கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரம் & அதை சார்ந்த திரைக்கதை (Hero).
  • கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் & அதை சார்ந்த திரைக்கதை (Anti Hero).
  • கதையின் முடிவில் இந்த இரண்டு தனித்தனி ட்ராக்குகளையும் ஒருங்கே இணைத்து அந்த ஆரம்ப காட்சியுடன் முடிச்சு போட்டு கதையை முடித்தல்.

ஆரம்பம்: இளம்பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் வனாந்திர பகுதிக்கு விடுமுறையில் வருவது, அங்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை காட்சிகளால் உணர்த்தி ஆனால் என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே அடுத்த கட்டத்திற்கு நகர்கிற திரைக்கதை யுக்தி.

N Shah முதல் ட்ராக்: ஜான்டே ஒரு வங்கி மேலாளர். அவரது மனைவி வீட்டில் தனித்து இருக்கும்போது  ஒருவன் அவரை பணயக்கைதியாக வைத்து, அவரது வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளை முடிந்தவுடன் ஜான்டே வின் மனைவியை அடித்து கோமாவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் வேறொரு பெரிய சம்பவத்தை மறைக்கும் ஒரு கண்துடைப்பு என்பதை பின்னர் உணரும் ஜான்டே தனியாக துப்பறிய துவங்குகிறார்.

Randeep Hooda இரண்டாவது ட்ராக்: ஒரு "மார்க்கமான" போலிஸ், அவருக்கு இருக்கும் ஒரு சிறுவயது வன்ம  நினைவுகள்,அதனாலேயே இன்னமும் மூரக்கமாக செயல்படும் அவரது நிலைப்பாடு என்று ஆரம்பிக்கும் இரண்டாவது ட்ராக், திடீரென்று அந்த போலிஸ் அதிகாரி ட்ராக் மாறி பயணிக்க ஆரம்பிக்கும்போது சூடு பிடிக்கிறது. ஒரு மாஃபியா டானுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் அவர் பாதியில் அந்த டானின் பரம எதிரிக்காக வேலை செய்ய துவங்குவதில் படம் சூடு பிடிக்கிறது.

இதற்க்கு மேல் என்ன நடந்தது என்பதை வெள்ளிதிரையிலோ (இன்னும் எங்காவது ஒரு மல்ட்டிபிளெக்ஸில் ஒரே ஒரு இரவுக்காட்சி மட்டும் ஓடிக்கொண்டு இருக்கும் பட்சத்தில்) அல்லது நல்ல டிவிடியிலோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.

climax 

படத்தின் நிறைகள்:

  • 50 வயதை தாண்டிய ஒருவரை ஹீரோவாக வைத்து கதையெழுதி அதனை திரைப்படமாக எடுக்கவும் ஒரு தனி தைரியம் உண்டு. நசீருத்தின் ஷா அவர்களுக்காகவே இந்த படம் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு படம் பாருங்கள். அவரது மிகச்சிறந்த    முயற்சிகளில் இதுவும் ஒன்று.
  • படத்தில் சில காட்சிகள் நம்மை மறந்து விசிலடிக்க வைக்கின்றது.
  • இரண்டு கொடூரமான காட்சிகள் நாற்காலியின் நுனிக்கு மன்னிக்கவும் நாற்காலியில் இருந்து தடுமாறி விழ வைக்கிறது (ஒன்று ஹூடாவுக்கு, ஒன்று ஷாவுக்கு).
  • உண்மையிலேயே முதல் பாதி  சிறப்பாக (சில க்ளீஷே காட்சிகள் இருந்தாலும்) அமைந்து இருக்கிறது. இயக்குனருக்கு இது முதல் படம் என்பதால் இரண்டாவது பாதியில் அவர் பாதையில் இருந்து தவறி இருப்பதை காண முடிகிறது.

  • ரந்தீப் ஹூடாவின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக அர்ஜுன் ராம்பால் இப்படித்தான் ஆரம்பித்தார். ஹூடா சிறப்பாக நடிக்க வாழ்த்துக்கள்.

  • ஹூடாவின் கேரக்டர் ஒரு மூடியான டைப் என்பதால் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை சத்தியமாக கணிக்கவே முடியவில்லை. சாதாரண ஒரு காட்சியில் பொசுக்கென்று சுட்டுக்கொன்று விடுவதும், சீரியசான ஒரு காட்சியில் சாதாரணமாக "எனக்கு இன்றைக்கு மூட் நன்றாக இருக்கிறது, பிழைத்துப்போ" என்று சொல்வதும்,ஹ்ம்ம் மனிதர் அதகளம் செய்து இருக்கிறார்.  இவருக்கு சரியான ஒரு இயக்குனர் கிடைத்தால் பின்னி பெடலெடுத்து விடுவார். இம்தியாஸ் அலி இயக்கத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் இவரது அடுத்த படத்தை இந்த ஒரு விஷயத்திற்காகவே மிகவும் எதிர்பார்க்கிறேன்.

  • நெடுநாட்களுக்கு பிறகு ஷரத் சக்சேனாவுக்கு ஒரு நல்ல பாத்திரம். அமைதியாக அலட்டல் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

  • படத்தின் முடிவில் ஷரத் சக்சேனா பேசும் ஒரு வசனம் இருக்கிறதே, அடடா, கண்டிப்பாக இந்த இயக்குனரின் அடுத்த படத்தை இந்த மாதிரி வசனங்களுக்காகவே பார்க்க தூண்டிவிடுகிறார் (தயவு செய்து ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்கவும்).

  • ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மகராந்த் தேஷ்பாண்டே (கிருஷ்ணா), மற்றும் ஆனந்த் மகாதேவன் (பத்திரிகை அதிபர்) இருவருமே அட்டகாசமான நடிப்பால் சபாஷ்! போட வைக்கிறார்கள்.

படத்தின் குறைகள்:

  • இப்போதெல்லாம் மூன்றில் இரண்டு படங்களில் ஹூடாவின் பாத்திரம் இந்த மாதிரியானதாகவே அமைந்து இருக்கிறது. டைப் காஸ்ட் ஆகிவிட்டார். ஆகவே கிட்டத்தட்ட இதனை எதிர்பார்த்தே நாம் செல்கிறோம்.
  • படத்தின் பின்பகுதியில் ஒன்றுமே இல்லாதது போல இருப்பது, ஷா வில்லன் ஆட்களிடம் இருந்து தப்பிப்பது போன்ற காட்சிகள் படத்தின் மிகப்பெரிய குறை.
  • மிகச்சிறந்த த்ரில்லர் படங்களுக்கு உதாரணம் சொல்லும் அளவிற்கு ஆரம்பித்த இந்த படம் பின்னர் ஒரு த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக மாறி விடுவது கொடுமை.
  • இளையராஜாவின் தேவையை இதுபோன்ற படங்களில் கிடைக்கும் பின்னணி இசையைக்கொண்டே மதிப்பிட முடிகிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3 Bullets

3/6 மூன்று தோட்டாக்கள்! ஷாவுக்கு 1, ஹூடாவுக்கு 1 & இயக்குனருக்கு 1.

தமிழ் சினிமா உலகின் பன்ச்: JohnDay – Watch it on a Holiday.

ட்ரைலர்:

பின் குறிப்பு: இந்த பதிவின் ஆரம்பத்தில் சம்பந்தமே இல்லாமல் மூன்று பத்திகள் எதற்கு எழுதப்பட்டு இருக்கிறது? என்று கேட்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு இந்த பதில்: ஒரு ஆளுமை தன்னுடைய பார்வையிலேயே காட்சிகளையும் சம்பவங்களையும் அவதானிக்கிறான். அதனாலேயே அவனுடைய தனித்தன்மை சம்பந்தப்பட்ட விஷயத்துடன் கலந்து வெளியாகிறது.

#சாவுங்கடா

Thursday, October 3, 2013

போஸ்டர் ஓட்டும் ஓநாய்

AV Mark on OA

இதுவரையில் எதிர்மறையான விமர்சனம்  கண்டறியாமல் பார்த்த அனைவராலுமே பாராட்டப்பட்டு வருகின்ற "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படம் நாளைமுதல் இரண்டாவது வாரத்திற்கு செல்கிறது.

மற்ற வணிகமயமான திரைப்படங்களின் சந்தைமயமாக்கலுடன் போட்டியிடும் அளவிற்கு நிதியில்லாத காரணத்தாலும், இதுவரை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இயக்குனர் மிஸ்கின் புதியதாக டிசைன் செய்யப்பட்ட போஸ்டரை நேற்று இரவு 3 மணிக்கு கோவை சுவர்களில் ஓட்ட ஆரம்பித்தார்.

  • தோள்  கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,
  • இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,
  • கை கொடுத்த திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்,
  • தியேட்டர் உரிமையாளர்களுக்கும்
  • நன்றி.

இந்த போஸ்டரை மிஸ்கின் அவர்களே வந்து சுவற்றில் ஓட்டுவதற்கு மூன்றாம்தர விளம்பர என்னமோ, அல்லது வேறு எந்த உள்நோக்கமோ கிடையாது.

உண்மையை சொல்வதானால், மிஸ்கின் தற்போது மேற்கொண்டுள்ள கோவை, திருச்சி, மதுரை, சேலம் நகர பயணங்களில் ஒவ்வொரு ஊரிலும் தியேட்டர் விசிட் செய்து ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்த "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்தின் ஒரிஜினல் முன்னணி இசை CDயை இலவசமாக கொடுத்து வருகிறார்.

இதற்காக 10,000 CD க்களை மிஸ்கின் அவர்களே சொந்த செலவில் தயாரித்துள்ளார். அதன் முதல் கட்டமாக நேற்று கோவை Fun Mall ல் இருந்து இந்த இலவச விநியோகம் துவங்கியுள்ளது. இந்த பயணத்தில் சென்னையில் இருக்கும் சிறுவர்களுக்கான சிறப்பு பள்ளியான வசந்ததிற்கு நிதியும் திரட்டுகிறார்.

நாளை முதல் மிஸ்கினின் பயண விவரங்களை இந்த தளத்தில் அப்டேட் செய்கிறேன்.

Mysskin Pasting Posters in Coimbatore 2 போஸ்டர் ஓட்டும் ஓநாய் 1

Mysskin Pasting Posters in Coimbatore போஸ்டர் ஓட்டும் ஓநாய் 3

Mysskin Pasting Posters in Coimbatore 4 போஸ்டர் ஓட்டும் ஓநாய் 4

Mysskin Pasting Posters in Coimbatore 3

Thursday, November 15, 2012

அம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வரலாறு

என்னத்த சொல்லறது , எல்லாம் என் நேரம் .இல்லாட்டி நன்பன்கிற போர்வையில இருந்த படுபாவி சொன்னத நம்பி , "அம்மாவின் கைபேசி" படத்துக்கு போவனா? முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு  " இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் " அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா ?) புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது , ஏன்னா நண்பனுக்குள்ள இருந்த துரோகிய அடையாளம் தெரிஞ்சிகிட்டேன் .ஆனா அந்த லாஜிக் படத்துக்கு செட்டாகல.

படத்துல தங்கர் ஆடுறத பாத்து பயந்துபோன நம்ம பய ,அப்பா வூட்டுக்கு போலாம்பான்னு அழ ஆரம்பிக்க, ஏண்டா ஒன்னால தான டிவில அந்த கருமத்த பாத்துட்டு இங்க வந்து தொலயவேண்டியதா போச்சின்னுட்டு நறுக்குன்னு தலைல ஒன்னு வச்சேன், ஒடனே பயபுள்ள தீபாவளிக்கு அதிரசதுக்கு பதிலா ஆட்டம்பாம முழுங்கின மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டான். அவன சமாதனபடுத்த ஐஸ் க்ரீம் வாங்கி குடுக்க கேண்டீன் போனா அவன் என்னான்னா ஐநூறு ரூபாய்க்கு சில்லரைஇல்லன்னு அலையவுட்டுட்டான்.

இந்த கடுப்பைஎல்லாம் சேத்துவச்சு மட்டிவுட்ட ராஸ்கோல போன்ல புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு கேட்டேன் ஏண்டா , தீவாளிக்கு எங்கிட்ட வாங்கிகுடிச்ச ஓசி குடியோட போத தெளியறதுக்கு முன்னாலேயே இப்புடி மட்டிவுட்டுடியேடான்னு . அலட்டிக்காம அந்த கெரகம் புடிச்சவன் சொல்லறான் , மாப்பள, நீயி பாண்டிச்சேரி போயி ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு புல் வாங்கிட்டு வந்துட்டு அதகாட்டியே எழுநூத்து அம்பது ரூபா தந்தூரி சிக்கன ஒண்டியா திண்ணுட்ட ,மேக்கொண்டு இதுதான் நியுட்டனோட தியரி, என்னஎப்புடி தாண்டவம் ஒரு சிறந்த படம்னு ஒரு ஒலகமகாபுளுகை புளுகி மாட்டிவுட்டெல்ல, அதோட எதிர்வினை தாம்ப்பு இது அப்புடின்னு லாஜிக்கா மடக்குனான் பாருங்க ,நிர்மலா டீச்சர் இடுப்ப பாத்துட்டு படிக்க மறந்து போன நியுட்டனோட மூணாவது விதி ( அந்த கெரகத்த பாத்தது ஒரு கொலைவெறி ப்ளாஷ்பேக் ) பளிச்சுன்னு ஞாபகம் வந்துடிச்சு}.

சரிடான்னு ,படம் பாத்த மத்த ரெண்டு பயபுள்ளங்கள கூப்பிட்டு , கோட்டு போட்டுக்கிட்டு கேமரா முன்னால வோக்காந்துகிட்டு இருகிறதா நெனச்சிகிட்டு ஒரே வரில படத்த பத்தி சொல்லுங்க ன்னேன், ஒருத்தஞ்ச்சொன்னான்"மிஸ்டு கால்" இன்னொருத்தன் சொன்னான் " பேட்டரி காலி ". படம் முடிஞ்சபொறவு ஒரு எலக்கிய வட்டார தோழர் பொன் போட்டு கேட்டார் படம் எப்புடின்னு நாஞ்சொன்னேன் " தங்கர் பச்சான் ஒரு வரலாறு " அந்த இலக்கியம் நா ஏதோ பாராட்டுன மாதிரி பிரமதம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.அநேகமா இன்னம் ரெண்டு நாள்ல படம் பாத்துட்டு கொலவெறியோட போன் பண்ணும்னு நெனைக்கிறேன்.

இல்லாட்டி இத்தோட நம்ம கூட்டே வேணாம்ன்னு வெலகிடும் ( நடந்தா நல்லதுதான், இல்லாட்டி எம்புட்டு நேரந்தான் அதோட போன்ல சமகாலம் ,முன்நவீனத்துவம் ,பின்னிரவு நேரங்களின் முன்போழுதுகளில் அப்புடின்னு இலக்கிய சம்பார குடிக்கிறது ( ஏன் இலக்கிய ரசம் இருக்கும் போது சாம்பார் இருக்ககூடாதா?) போன் பேசுறத கேட்டுகிட்டு பக்கத்துல இருந்த பொண்டாட்டி கேட்டா ,"ஏங்க அதுக்கு என்னங்க அர்த்தம்" நாஞ்சொன்னேன் அதுக்கு பேர்தான் " முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறதுன்னு " இத படிச்சுட்டு படத்தோட விமர்சனம் என்ன அப்புடின்னு என்ன கேக்கிற புண்ணியவான் தயவுசெஞ்சு, படத்த பாத்துட்டு வந்து உயிரோட இருந்தா, கத என்னன்னு சொல்லி எனக்கு மெயில் போடுங்க.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1 Bullet

1/6  ஒரே ஒரு தோட்டா,அதுவும் கூட போனாப் போவுதுன்னுதான்!

சாவியின் பன்ச்: மிஸ்ட் கால - தங்கர் இஸ் ஹிஸ்டரி.

Friday, July 13, 2012

காணத் தவறாதீர்கள் வாலிபன் சுற்றும் உலகம்

Vaaliban Sutrum Ulagam

வணக்கம்.

ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வர முடியவில்லை. ஆனால் இன்று தமிழ் சினிமாவை திருப்பி போடும்படியாக ஒரு சம்பவம் நடந்தது (கண்டிப்பாக பில்லா ரிலீஸ் அல்ல). அதனாலேயே இந்த வலைப்பதிவு இங்கேயும் சரித்திரத்திலும் இடம் பெறுகிறது. இன்று காலையில் தினத்தந்தி படித்துக் கொண்டு இருந்தபோது இங்கே அருகில் இருக்கும் இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே வாலிபன் சுற்றும் உலகம் என்று டைட்டில் இருந்தது, புரட்சித் தலைவர் எம்ஜியார் போலவே இருக்கும் ஒருவர் நடிப்பதுவுமே காரணமாக இருக்கலாம்.

ஏற்கனவே சென்ற ஆண்டு நாமக்கல் எம்ஜியார் என்றொருவர் நடித்து ஒரு படம் (ஆட்சி மாறியதும்) ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். அதிஷா கூட அந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு,அவரது ஆசை நிறைவேறாமலேயே போனது ஒரு தனிக்கதை. ஆனால் அந்தப்படம் போல மொக்கையாக இல்லாமல் சற்றே நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விளம்பரத்தை மறுபடியும் பார்த்தேன். இந்த படத்தின் இயக்குனர் யாரென்று பார்த்தால் A.R. லலிதசாமி என்றிருந்தது. என்னுடைய வாழ்நாளில் நான் பலவிதமான,வித்யாசமான பெயர்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்(அதில் ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகனுக்கு கலவரம் என்றெல்லாம் பெயரிட்டு இருந்தது அடங்கும்). ஆனால் சத்தியமாக இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் அவர் யார், எனன செய்கிறார் என்று விசாரிக்கவாவது ஆசைப்பட்டு  தகவல்களை சேகரித்தேன். அதன் விளைவே இந்த பதிவு.

பழனியை சேர்ந்த சிவா என்பர்தான் ஹீரோ. பொள்ளாச்சியை சேர்ந்த லலிதசாமி தான் இயக்குனர். நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு T.M.சவுந்தர்ராஜனும் P,சுசீலாவும் சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இன்று சென்சார் போர்டுக்கு செல்லும் இந்த படம் அடுத்த வாரமோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13072012256

ACTORS:

M.G.R SIVA

M.G.R HARI

A.R.LALITHASWAMY

MEENATHCHI

LATHA

AADAVAN

ASHOKRAJ

SENTHILVEL

MANAORMA

MUTHUKUMAR

SURULI MANAOHAR

SKOVAI SENTHIL

MUSIC: Mellisai mannar M.S.Viswanathan

LYRICS:

Padmasri ' Vali'

Kamakodian ( That bhut Tanjavuru)

Story ,screen play , Direction

A.R.LALITHASWAMY

13072012258

Play Back Singers:

M.S.Viswanathan

T.M.Sounderarajan

Ananth

S.P.Balasubramaniam

P. Suseela

Chitra

Jayashree

Katrthika

Songs

Ramavararthi thottamithu

Mudal tamil un vizhilnile

Naan deivatahi pettra pillai

Unnai naan santhithen

Thentrale ini ennai thodathe

That bnut tanjavuru

Camera - Rajarajan

Stunts - Super Subbarayan

Art - Vinodth

Stills - Chandru

Production manager - Arumugam

Public relations officer - Venkat

Studio - A.V.M

Lab - Gemini

Production unit - Seven mounten

13072012259

இன்று இந்த இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விரிவாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றிரவு அவர் திரும்பவும் பொள்ளாச்சி செல்கிறார். திரும்பவும் சென்னை வந்து என்னை சந்திப்பதாகவும், ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். பார்க்கலாம்.

Thursday, March 1, 2012

இஷ்க் தெலுகு திரைப்பட விமர்சனம் - Ishq (Telugu Film Review): 24-02-2012

வணக்கம்.

சமீப காலமாகவே தெலுகு படவுலகம் கொஞ்சம் மழை,ரொம்ப வெயில் என்றுதான் இருக்கிறது. தூகுடு, பிசினெஸ்மேன் என்று மெகா ஹிட்டுகள் வந்தாலும், பெரும்பாலான ஹீரோக்களின் மெகா படங்கள் தொடர் தோல்வியையே தழுவி வருகின்றன. நம்முடைய மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்களுக்கு அது ஒரு வகையில் திருப்தியே என்றாலும்கூட தெலுகு சினிமா தொழிற்சாலையை அது பெரிதளவும் பாதித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர் தோல்வியை தழுவுவது ஆபத்தான ஒரு விஷயம். இந்த சூழலில் நிதின் (தெலுகில் ஜெயம் படத்தில் நடித்தவர்) நிலைமை மிகவும் மோசம். பாவம் ஐவரும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் ஒன்றும் நடப்பது போல இல்லை. ஆகையால் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்தபோது ஆபத்தாந்தவனாக வந்து சேர்ந்தார் யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார். இவர்கள் இருவரின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள படமே இஷ்க் (காதல்).

படத்தின் பின்னணி: விக்ரம் குமார் என்றவுடன், ஆஹா யாவரும் நலம் என்ற விறுவிறுப்பான ஹிட் படத்தை கொடுத்தவர் என்று மட்டும் நினைத்துவிடவேண்டாம். இவர்தான் சிம்புவை வைத்து அலை என்ற மெகா ஹிட் படத்தையும் கொடுத்தவர். ஆகையால் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மிக்சட் ஆகவே இருந்தது. அதிலும் ஹீரோ நிதின் ஒரு ஹிட் படம் கொடுத்து எட்டு வருடங்கள் ஆகியதும் சற்றே கிலேசம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் இந்த மாத மத்தியில் நடந்த ஆடியோ லான்ச் விழாவில் பவன் கல்யான் வந்து இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது நிஜமே.

Ishq Telugu Film Poster chn அதிலும் என் பழைய நண்பர் ரூபன் இசை என்பதும், இந்த படத்தின் முதல் பாடல் (கிளப் சாங்) மெகா ஹிட் ஆகி பிளாட்டினம் டிஸ்க் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில் சொல்லவேண்டிய மற்றுமொரு விஷயம்: ரூபன் நிதின் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டது. தொடர்ந்து நான்கு/ஐந்து நிதின் படங்களுக்கு இசையமைத்தவர் யார் என்பதை சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும். அதுவுமின்றி பழைய ஜிகிடி சிந்து தொலானி இந்த படத்தில் "மிகவும் முக்கியமான" ஒரு பாத்திரத்தில் "நடித்திருப்பதாக" ஒரு தகவல் வர, சிந்துவின் மீதிருந்த "திறமைகளின்" எதிர்பார்ப்புடனே இந்த படத்திற்கு சென்றோம். படம் ரிலீஸ் ஆன அன்று சென்னையில் இல்லாமல் இருந்தது ஒரு பெரிய குறை. இருந்தாலும் சென்னை வந்தவுடன் பார்த்த முதல் படம் இஷ்க் தான்.

படத்தின் கதை: ஒரே லைனில் சொல்லகூடிய மிகவும் சாதாரணமான "கண்டவுடன் காதல்" வகைதான் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்து போரடிக்காமல் படத்தை இயக்கியுள்ளார் விக்ரம்.நித்யா மேனனை முதல் பார்வையில் கண்டதில் இருந்து காதல் கொள்ளும் நிதின், மழை காரணமாக விமானப்பயணம் தடைபட, இடைப்பட்ட நேரத்தில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அது காதலாக மலர, ஒரு ஃபிளாஷ்பேக் அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. என்ன, எப்படி என்பதை மேலே விளம்பரத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் கண்டு களிக்கவும்.

படத்தின் நிறைகள்: 

  • சிறப்பான திரைக்கதை அமைந்தால், வெறும் மூன்று கேரக்டர்களை மட்டுமே மைய்யமாக கொண்டு ஒரு முழு படத்தை நகர்த்த இயலும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். பழைய பாக்கியராஜ் சாயல் திரைக்கதை இந்த படத்தில் பளிச்சிடுகிறது.
  • நிதின் என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். இந்த படத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். இதைப்போலவே தொடர்ந்து நல்ல படங்களை செலக்ட் செய்தால் மறுபடியும் டாப் ஹீரோவாக வருவார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.
  • மிக மிக சாதாரண ஒரு கதையை சிறப்பான திரைக்கதையால் ஜாலியான ஒரு டைம்பாஸ் படமாக மாற்றியதில் இயக்குனருக்கு பெரும் பங்கு உண்டு. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
  • கண்டிப்பாக சினிமொட்டோகிராபி பற்றி கூறியே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த கோவா பீச்சில் நடக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டவிதம் அற்புதம்.
  • நித்யா மேனனை பற்றி கூறாவிடில் ஜன்ம சாபல்யம் அடையவே அடையாது. அம்மிணி அடுத்த ஜோதிகாவாக மாறி வருகிறார். குறிப்பாக அந்த துருதுரு முக பாவனைகளும், அந்த கண்களும் மயக்குகின்றன. லக்கியார் ஏன் இன்னமும் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காமல் இருக்கிறார் என்பது புரியவில்லை.
  • முதல் பாடல் மெகா ஹிட் ஆனாலும், மற்ற பாடல்கள் படத்தில் வரும்போது ரசிக்க வைக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.

படத்தின் குறைகள்:

  • சீனு வைட்லா ஸ்டைல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கிளிஷே ஆக தெரிகிறது.
  • மிஷன் இம்ப்பாசிபில் (மூன்றாம் பாகம்) படத்தில் வரும் அந்த லொகேஷன் கண்டுபிடிக்கும் காட்சிகளை அப்படியே கிளைமேக்சில் யூஸ் செய்து இருக்கிறார்கள்.
  • ஓரிரு பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பது.
  • சில காட்சிகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கின்றது. குறிப்பாக அந்த ஹாஸ்பிடல் காட்சி.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3 Bullets

3/6 மூன்று தோட்டாக்கள்! பொழுதுபோக்கு படம்.

சாவியின் பன்ச்: ஜாலியான படம். காதல் கொள்ளலாம். 

ட்ரைலர்: